02.04.09
ஈழப்பிரச்சனையில் உணர்வற்ற மத்திய அரசு: அத்வானி
இலங்கைத் தமிழர்கள் தினந்தோறும் இன்னலை சந்தித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசோ அந்த விவகாரத்தில் சிறிதும் உணர்வற்ற விதத்தில் நடந்து கொள்கிறது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து ஆலோசிக்க தமிழக பாரதிய ஜனதா பிரதிநிதிகள் கூட்டத்தை எல்.கே.அத்வானி டெல்லியில் செவ்வாய்க்கிழமை கூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசும் போது இலங்கைத் தமிழர்கள் படும் துயர் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அத்வானி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உணர்வற்ற நிலையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் அது இலங்கை மண்ணில் இருந்து அகதிகளாக வெளியேறும் தமிழ் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்றார். போர் முனையில் சிக்கித் தவிக்கும் மக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
